தகிப்பு

தகிப்பு



   லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் தறையிறங்க ஆயத்தமானது நாங்கள் பயணித்த  பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்.
சொகுசான பிஸினஸ் க்ளாஸ் பயணம். முழுதாக அனுபவிக்க முடியாமல் ஏதேதோ நினைவுகளால் நிரம்பியிருந்தது மனம்.
"ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காய். காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன். வெள்ளைக்காரன் பணம் வெள்ளிப் பணம். வேடிக்கை செய்யுது சின்னப் பணம்"
ஊரில் பாடும் கும்மிப் பாடல் மனதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.
 சுங்கத்துறை நடைமுறைகள் முடித்து உடைமைகளைச் சரிபார்த்து  வாடகை வண்டியில் ஏறினோம். புராதனமும் நவீனமும் இணைந்த அழகியதொரு கலவையாக  ஈர்த்தது லண்டன் மாநகரம்.  ஆனாலும் காட்சிகளில் லயிக்கவில்லை மனம்.

"சூரியன்  மறையாத தேசம்" என்று சொல்லிக் கொண்டு எங்கள்  பாட்டன் பூட்டனை எல்லாம் அடிமையாக்கி ஆண்டவன் தானே இந்த பிரிட்டிஷ்காரன் ?" என்ற  ரீதியில் மனசுக்குள் ஒரு தகிப்பு .
சரித்திரப் புத்தகங்களில் படித்த சுதந்திரப் போராட்ட வரலாறுகள் எல்லாம்  மனதில் வந்தன.அனலாய்  தகித்தது மனது.
லண்டனின் பிரதான சாலையொன்றில் இருந்த ரிட்ஸ் ஹோட்டலில்  தங்கும் ஏற்பாடு.
 நவீனத்தையும் சொகுசையும்  கச்சிதமாக  அடைத்தது போன்ற அழகான அறை.
அன்னப் பறவையின் இறகுகளால் ஆனது போன்ற மெத்தையில் விழுந்தது தான் தெரியும்.

காலையில் எழுந்து பல் துலக்க தூரிகையைத் தேடினேன்.அட!! முகம் பார்க்கும் கண்ணாடியில் தொலைக்காட்சி !!

மேலே எங்கேயோ இருந்து லேசர் மூலம்  கண்ணாடியில் காட்சி  விரிகிறது . தொழில்நுட்பம் தான் எப்படி வளர்கிறது.....  தொலைக் காட்சிப் பெட்டியே இல்லாத தொலைக் காட்சி!இங்கிலாந்து அரசியின் டைமண்ட் ஜுபிளி வருகிறதாம்!
பதவியேற்று 60 ஆண்டுகள் முடிந்து விட்டதற்கான  கொண்டாட்டம்!!
அடிவயிற்றில் அப்படியே எழுந்தது ஒரு நெருப்பும் அதன் தகிப்பும்... ஹீத்ரோ விமான நிலையத்தில் காலடி வைத்ததிலிருந்தே  தொல்லை செய்து கொண்டிருக்கிற அதே  தகிப்பு...

ஊரைச்சுத்திப் பாக்க வந்த இடத்தில் இந்த சிந்தனை எல்லாம் தேவையா என்று மனதின் குரல் ஒரு மூலையில் ஒலித்தாலும் இந்த நெருப்பு தணியவில்லை.

 நவீன வசதிகளுடன் வெளியே காத்திருந்த  வால்வோ பேருந்து மினுமினுவென மலைப் பாம்பை நினைவூட்டியது.
படியேறும் முன்பு  ஐந்தடி நான்கு அங்குல உயரத்தில் இருந்த உயிருள்ள ப்ரிட்டிஷ் பூச்செண்டு ஒன்று புன்னகையுடன் கை கொடுத்தது.
"ஐம் மரியா லாரென்ஸ். யுவர் டூர் கைட் ஃபார் த டே".
பிரிட்டிஷ் ஆங்கிலம் எளிதாகப் புரிந்தது.அடிமை ஆட்சியின் ஒரே நன்மை.

டிரைவிங் சீட்டில் இருந்தது 60 வயது நிரம்பிய ஒரு சூப்பர் ஸ்டைலிஷ் பெண்மணி. மிக நேர்த்தியான உடை, கூலர்ஸ் என்று கலக்கலாக பைலட் போல  இருந்தார். ஓய்வுக்குப் பின் இந்த வேலையை விரும்பிச் செய்கிறாராம்!
 நம் ஊரில் பணி ஓய்வு பெற்ற பின் பெண்களின் பணித் தேர்வும் மனநிலையும் ஞாபகம் வந்தது. 
பேருந்து வேகமெடுத்ததும் மரியா லண்டனின் அருமை பெருமைகளைப் பேச ஆரம்பித்தார்.இசைபோலக் குரல்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் உயிர்ப்புடன் இருக்கும் உலகின் ஒரே நகரம் லண்டன் என ஆரம்பித்தார்.  "மதுரை வந்திருக்கியா நீ" என் வாய்வரை வந்த கேள்வியை அடக்கிக் கொண்டேன்.

ஒவ்வொரு கட்டிடத்திலும் அதன் எண்கள் பிரதானமாகப் பொருத்தப்பட்டிருப்பது  ஆச்சரியமாக இருந்தது. அது அவர்களது கௌரவத்தின் அடையாளமாம்!!

10.டௌனிங் ஸ்ட்ரீட் இங்கிலாந்து பிரதமரின் இல்லம் என்பது உலகத்துக்கே தெரியும். எண 7. லோக் கல்யாண் மார்க் என்பது  பாரதப் பிரதமரின்  இல்லம்னு  இந்தியர்களுக்காவது தெரியுமா?என்று நினைத்துக் கொண்டேன்.

கல்கண்டு  வாரஇதழ் மட்டுமே படிக்க அனுமதிக்கப் பட்ட என் சின்னஞ்சிறு வயதில் அதில்  படித்துத் தெரிந்து கொண்டது தான் லண்டனில் உள்ள மேடம் ட்விசாட் எனும் மெழுகுச் சிலை மியூசியம்.பிரபலமானவர்களின் அச்சு அசலான மெழுகுச் சிலைகளின் காட்சியகம் அது.. உள்ளே நுழைந்த போது அத்துணை பரவசம்!!
 சிலைகளில்  தான் எத்தனை உயிர்ப்பு!

என்னவர் பழைய ஹாலிவுட் ஹீரோக்களுடன் ஓடி ஓடி நின்று படமெடுத்துக் கொண்டிருந்தார்.
"ஹாலிவுட் ஹீரோஸ் எல்லாம் பார்த்தா மாமா சந்தோஷப் படுவாங்க" என்றபடி.
என் அப்பா ஆங்கிலப் படங்களின் தீராக் காதலர்.சரியாகச் சொன்னால் சீன் கானரி 007 ஜேம்ஸ்பாண்ட் பைத்தியம்.

இங்கிலாந்து ராணியுடன் (மெழுகுச் சிலையுடன் தான்) சேர்ந்து படமெடுக்க அங்கு ஏக நெருக்கடி.காந்தி ஹிட்லர் சச்சின் என அனைத்து பிரபலங்களுடனும் கை குலுக்கி விட்டு தமிழ்நாட்டிலிருந்து யாரும் இல்லையே என நினைத்தபடி கீழே இறங்கினேன்.
 வேகமாகத் திரும்பும் போது ஒரு சிறு கவனப் பிசகு. இரும்பு ரெய்லிங்கில் 'நங்'கென்று காலில் ஒரு பயங்கர அடி.ஏற்கெனவே ஷு ஒவ்வாமையால் இருந்த  வீக்கத்தின் மீதே.. யம்மா.. வலியோ வலி....

நொண்டி நொண்டி நடந்து ஒரு வழியாக பேருந்தை அடைந்தேன்.

ஷாப்பிங் என்று கடைவீதியில் இறக்கி விட்ட போது  நடக்க முடியவில்லை. ஒரு நடைபாதை இருக்கையில் அமர்ந்த படி லண்டனை அளந்தேன்.என்னை அதிகம் கவர்ந்தவை அகலமான சுத்தமான சாலைகளும் மக்களின் கட்டுப்பாடும் ஒழுங்கும் தான்.
 சைக்கிளில் செல்பவர்கள் நிறையபேரைப் பார்க்க முடிந்தது. சைக்கிளைப் பூட்டிவிட்டுச் செல்ல அதற்கான கம்பங்கள் வேறு ஆங்காங்கு! மற்ற ஐரோப்பிய நகரங்களைக் காட்டிலும்  லண்டனில் நிறைய ஆசிய முகங்கள் என்று தோன்றியது.

 அடுத்துச் சென்றது பிரம்மாண்டமான பக்கிங்ஹாம் அரண்மனை.
ராணியின் வைரவிழா நெருங்கிக் கொண்டிருந்ததால் ராணி அடிக்கடி தரிசனம் தருகிறார் எனக் குவியும் மக்கள் கூட்டம். அங்கு ராஜ குடும்பத்துக்கென அவர்கள் வைத்திருக்கும் மரியாதையையும் அன்பையும் பார்க்க விசித்திரமாக இருந்தது.

அரண்மனையின் முன்புறம் அமைந்திருந்த  பிரம்மாண்டமான கண்கவரும்
நீரூற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என் சிந்தனையோட்டம் தடைபட்டது.
எங்கேயோ இருந்து மின்னலாய்  இரண்டு கம்பீர வெண்புரவிகள். அதன் மேல் முழுச் சீருடையணிந்த இரண்டு பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள். எட்டடி உயரம் இருப்பானோ..யம்மாடி!
கணீரென்ற அதிகாரக் குரலில் தொண்டை நரம்பு புடைக்கக் கத்தினான்."நகருங்கள். வரிசையில் இணையுங்கள். நெரிசலை ஏற்படுத்தினால் நான் கடுமையாக நடக்க வேண்டி வரும்". ஒலி பெருக்கியை முழுங்கி விட்டுப் பிறந்தானோ..
என்ன குரல் இது?

முக பாவமும் அகம்பாவமான உடல் மொழியும் குரலும் அச்சமூட்டின.  இங்கேயே இத்தனை வேகமா? அடிமை இந்தியாவில் சாதாரண மக்களை  பிரிட்டிஷ் வீரர்கள் என்ன பாடு படுத்தினார்களோ என்ற ரீதியில் ஓடியது சிந்தனை...

அரண்மனையைச் சுற்றிப்  பார்க்க மனமின்றி  தனியே  நடக்க ஆரம்பித்தேன்.
 மற்றவர்கள் வரும் வரை நிற்கும் பொறுமையும் இல்லை. காலில் உயிர் போகும் வலி வேறு.

சற்று தொலைவில் நின்ற பேருந்தின் அருகே  எப்படியோ நடந்து வந்து விட்டேன். மேலே ஏற முடியும் என்று தோன்றவில்லை.
அந்த ஏழு படிகள் எவரெஸ்டை நினைவு படுத்தியது.  கண்ணீரில் வலியைக் கரைக்க முயற்சித்து மௌனமாக நின்று கொண்டிருந்தேன்.

"வாட் ஹேப்பண்ட். உங்கள்  அழகான புன்னகை முகம்
 வாடிப்போய் விட்டதே" என்றார் மரியா. வலியைப்  பற்றிச் சொன்னேன்.

அப்போது தான் நான் சற்றும் எதிர் பார்க்காத அந்த விஷயம் நடந்தது.  மரியா ஓடி வந்து என் அருகில் மண்டியிட்டு அமர்ந்தார்.
 என் பாதத்தை தன் கைகளில் ஏந்தினார். "ப்ளீஸ் வெய்ட்" என்று சொல்லி விட்டு ஷூ லேஸை அவிழ்த்து சாக்ஸ் எல்லாம் கழற்றினார்.என் சுண்டு விரலில் பழுத்து வெடித்துச் சிதறக் காத்திருக்கும் பழம் போல் ஒரு கொப்புளம்.
 முதலுதவிப் பெட்டியை  எடுத்தார்.
 கால் மண்ணைத் துடைத்தார். பஞ்சினால் மருந்திட்டார். மெதுவாக காலை வருடிக் கொடுத்தார் .
" நோ ஒர்ரீஸ். த பெய்ன் வில் சப்சைட்" என்று ஆறுதலாகச் சொல்லிவிட்டு கைத்தாங்கலாக முன் சீட்டில் அமரவைத்தார்.

என் பாதங்களை அவர் கையிலேந்திய அந்த நொடியில் என்  நீண்ட நெடுங் காலத் தகிப்பின் மேல்  ஒரு அடர்த்தியான அன்பின் ஊற்று சில் லென்று பொழிந்தது போல் உணர்ந்தேன்.

"காலங்கள் மாற மாற  நம் மனதில் பற்பல காரணங்களால் துருவாகப் படிந்து  போயுள்ள  வரலாற்றின் தேவையற்ற படிமங்கள் மறக்கப்பட வேண்டும் .வன்மங்கள் மீண்டும் மீண்டும்  உயிர்த்தெழுவதால் சேதாரமே அதிகம்" என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.த பெய்ன் ஹேஸ் டு சப்சைட்...!

லேசான  மனதுடன்   லண்டன் டவரில்  உள்ள ஜூவல் ஹவுஸில்  கோஹினூர் வைரத்தைப் பார்வையிடத் தயாரானேன்.

"எங்க நாட்ல இருந்து  கோகினூர் வைரத்தைத் திருடிக் கொண்டு போய்விட்டு எக்ஸிபிஷன்ல வெச்சு எங்களையே டிக்கெட் போட்டு பாக்க விடறீங்களா" என்று  அன்று இரவு மீண்டும் ஓலமிட ஆரம்பித்தது மனது.

சில வருடங்களாக லண்டனில் தங்கியிருக்கும் குடும்ப நண்பர் சக்தி வேலிடம் உரையாடிய போது
"இது போல்  மன வியாதி(!)  எனக்கு மட்டும் தானா?நீங்க எப்படி லண்டன்லயே இருக்கீங்க? என் மனதை அடக்க  ஒரு வழி சொல்லுங்களேன்"என்றேன்

" லண்டன் உலகின் அனைத்து மக்களையும் ஓரிடத்தில்  கொண்டுவந்து சேர்க்கும் இடம் . இன்றைய தலைமுறை பிரிட்டிஷ் மக்கள்  இந்தியன் என்று  தனியாக யாரையும் பிரித்துப் பார்ப்பதில்லை. அவர்களுக்கு வெளிநாட்டவர்கள்  எல்லோரும் ஒன்றுதான்  .   லண்டனில் மட்டும் 250 பலதரப்பட்ட  மொழிகள்  பேசும் ஒரு கோடி மக்கள் உண்மையான சமத்துவதுடன் வாழ்கின்றார்கள் .  அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விரும்பத்தகாத செயல்கள் எப்பவாவது நடைபெறும் . அனாலும் அடுத்த நொடியே போலீஸ் களத்தில்  இறங்கி  மக்களை காப்பாற்றி விடுகின்றது . வெள்ளைகாரர்களாக இருந்தாலும்   தீவிரவாத செயல்களில் ஈடுபட்டால் தண்டனை ஒன்று தான் .

மன்னர் குடும்பம் இங்கு இருந்தாலும் உண்மையான மக்களாட்சி நடைபெறுகிறது.
ஒரு எம்.பி.யை நான்  நேரிலோ தொலைபேசியில் அழைத்து விட்டோ உடனே  சென்று  சந்தித்து என் பிரச்னையைச் சொல்ல முடியும்.இந்தியாவில் அப்படியா?

நம் நாட்டில் மக்களாட்சி என்ற பெயரில் என்ன நடைபெறுகிறது என்று நீங்களே யோசியுங்க.இங்கு இருக்கும் இந்தியர்களுக்கு அமைதியான நல்ல வாழ்க்கை  கிடைக்கிறது.

 வரலாறு  நம்மை வழிநடத்த வேண்டும்.இல்லையெனில் பழசைக் கிளறுவதில்  பயன் என்ன சொல்லுங்க" என்றார் புன்சிரிப்புடன்.

வேறு கோணத்தில் சிந்தனையைச் செலுத்தியது அவரது பேச்சு.

' ஜென் கதைகள்'புத்தகத்தில் எப்போதோ வாசித்த வரிகள் நினைவுக்கு வந்தது..

"குருவே!ஆமை ஏன் மெதுவாகச் செல்கிறது?
முயல் ஏன் துள்ளிக் குதித்து ஓடுகிறது?"

"முயலுக்கு  ஓடு எனும்  சுமை இல்லை சிஷ்யனே!"

குருவின் பதில் எனக்கானதும் தான்.ஓடுகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம்!!

இன்று நம் நாட்டில்  ஏதேனும் இரு பிரிவினருக்கிடையே ஒரு விதமான  அமைதியற்ற கொதிநிலை இருந்து கொண்டே இருப்பதற்கு  மக்களின் மனம் சுமக்கும் கடந்தகால வரலாறெனும்  ஓடுகளின் சுமை தான்  முக்கிய காரணம் என்று தோன்றியது.  எத்தனை நாளைக்கு இறந்தகாலத்தின் ரணங்களை கீறிக்கீறி  ஆறவிடாமல் பார்த்துக் கொள்ளப் போகிறோம்?   அதன் பொருட்டு நிகழ்கால பொழுதுகளின் நிம்மதியை,மகிழ்ச்சியைத் தொலைக்கப் போகிறோம்?

  நாளைய பொழுதுகளை  நோக்கி நம்பிக்கையோடு நகர்வோம் சுமைகளற்று....!







Comments

Popular posts from this blog

உணவல்ல உணர்வு!

தூரி நோம்பி

சகிப்பதேன் சகியே..?!